Friday, March 4, 2011

பிள்ளை பெற்றால் மட்டும் போதுமா?


டந்த வாரம் ஒரு ரயில் பயணம் செய்ய வேண்டிய நிலையில்,அவசரம் அவசரமாக டிக்கெட் எடுக்க ஓடினேன்.இன்றும் வழக்கம் போலவே கூட்டம்;நீண்ட வரிசை. எனக்கு இது போன்ற நீண்ட நேரம் வரிசையில் நிற்பது என்றால் மகா எரிச்சல்.என்ன செய்வது,வீட்டுத்தேவைக்காவது ஒரு நாள் ரேசனில் நின்றிருந்தால் இதெல்லாம் சர்வசாதாரணமாகி இருக்கும்.

ஆனால், எனக்கு பின்னால் நின்றிருந்த பெரியவர் அதைப்பற்றியெல்லாம் கவலைப்படாமல் நின்றிருந்தார். அவர் கவலையெல்லாம், கொஞ்சம் தள்ளி நின்றிருந்த தனது பேரன் எங்காவது போய் விடுவானோ! என்பது தான்.

வழக்கம்போலவே,விசாரிப்புகள் முடிவடையும் தருவாயில் டிக்கெட் எடுக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது.நான் அவசரமாய் ஓட தயாரானேன்,பத்து நிமிட பழக்கத்திற்காக அவருக்கும்,அவரது பேரனுக்கும் இடம் போட்டு வைக்கும் கோரிக்கை பெரியவரால் முன்வைக்கப்பட்டது.

ரயில் புறப்பட்டதிலிருந்து பேரனின் கேள்விகளும் புறப்பட்டது.

"அடுத்த வாரம் என்னை வந்து வீட்டிற்கு கூப்பிட்டு போங்க... தாத்தா"

"பார்க்கலாம்,சாமி"

"சொல்லு, தாத்தா" கொஞ்ச பேரனுக்கே உரிய அதட்டல.

"நான் அடுத்த வாரம் சித்தப்பா வீட்டிற்கு போயிடுவேன்"

"அங்கே, போனால் என்ன, வர முடியாதா?"

"இல்லை,அடுத்த மாசம் பூராவும் சித்தப்பா வீட்டில் தான் சாப்பாடு,அவங்களுக்கு தான் வேலை செய்ய வேணும்."

பத்தாம் வகுப்பு படிக்கும் பேரனுக்கும், பாசத்துக்குரிய தாத்தாவுக்கும் இடையேயான ஒரு உரையாடலில் இப்போதைய சமூகத்தில் பெருகி வரும் "சமூக நோய் ' இந்த பெரியவரை தாக்கி இருப்பது அறிய முடிந்தது.


ஆமாம், அவர்களின் எதார்த்த உரையாடலில் இருந்து பெரியவருக்கு இரு மகன்கள்,இருவரும் அரசாங்க உத்தியோகம்.பெரியவரின் மனைவி இறந்த பிறகு அப்பாவை யார் கவனிப்பது என்ற போட்டியில் மாத தவணையில் ஒவ்வொரு மாதமும் ஒரு மகன் வீட்டில் தங்கியிருப்பது தான்.அந்த மாதம் முழுவதும் குறிப்பிட்ட மகன் வீட்டிற்கு பில் கட்டுவது,ரேசன் கடைக்கு செல்வது, பேரன்களுக்கு உதவுவது போன்ற பணிகளை செய்ய வேண்டுமாம்.

வயதான காலத்தில் கிழவியும், கிழவனும் ஏன் பாசமாக இருக்கிறார்கள் என்று புரியாதவர்கள் இனி அவர்களை உற்று கவனியுங்கள்.நேரில் பயங்கரமாக சண்டை போடுவார்கள், கொஞ்ச நேரங்கூட பிரிந்து இருக்க மாட்டார்கள்.

ஆனால்,பெற்ற பிள்ளைகள் ?

தென்னையை பெற்றால் இளநீரு
பிள்ளையை பெற்றால் கண்ணீரு

No comments:

Post a Comment