Sunday, July 31, 2011

பாவை கூத்து

உயிரற்ற பாவைகளை உயிருள்ள பாத்திரங்களைப் போல் இயக்கி நிகழ்த்தப்படும் கூத்து பாவைக்கூத்து என்றழைக்கப்படுகிறது. பதப்படுத்தப்பட்ட ஆட்டுத் தோலில் வரையப்பட்ட வண்ணப்படங்களை விளக்கின் ஒளி மூலம் திரைச்சீலையில் அதன் நிழல் தெரியுமாறு ஆட்டி நிகழ்த்துவது தோல்பாவை கூத்து. மராட்டியைத் தாய்மொழியாகக் கொண்ட ‘கணிகர்’ சாதியின் உட்பிரிவான ‘மண்டிகர்’ சாதியைச் சார்ந்தவர்கள் இக்கலையை நிகழ்த்துகின்றனர். ஓலை அல்லது துணியால் வேயப்பட்ட சிறிய அறையே தோல்பாவைக் கூத்தின் அரங்கமாகும். இவ்வறையின் முன்பகுதியில் மெல்லிய வெள்ளைத் திரைச்சீலை கட்டப்பட்டிருக்கும். பாவைகளை இயக்கிக் கூத்தினை நடத்துபவர் இவ்வறையினுள் இருப்பார். அரங்கின் உள்பகுதியில் உள்ள வெண்திரையை ஒட்டி ஆட்டப்படும் பாவைகளின் மீது விளக்கின் ஒளி ஊடுருவும் போது பார்வையாளர்களுக்குப் பாவைகள் தெளிவாகத் தெரியும். பார்வையாளர்கள் மண் தரையில் அமர்ந்திருப்பர். கூத்தரங்கின் முன்பகுதியில் இசைக்கருவிகளை இசைப்பவர்களும் பின்பாட்டுப் பாடுபவர்களும் அமர்ந்திருப்பர். இக்கலைஞர்கள் தங்களின் இருப்பிடத்தில் இருந்து கிளம்பி பல ஊர்களில் நிகழ்ச்சி நடத்தி மீண்டும் 6 மாதங்கள் கழித்து சொந்த கிராமத்திற்குத் திரும்புகின்றனர். ஆகவே இவர்கள் நாடோடிக் கலைஞர்களாகக் கருதப்படுகின்றனர்.

No comments:

Post a Comment